கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

பிராட்பாண்டிற்கான புதிய வரையறுப்பு

Posted by Clement மேல் ஓகஸ்ட் 8, 2011


இன்றைய தேதியில் பிராட்பாண்டு இணைய இணைப்பு என்பது, நம்மில் பலரும் அன்றாடம் உபயோகப்படுத்தும் ஒரு சேவையாக உள்ளது. கணினித் துறையில் உள்ளவர் மட்டுமல்லாது வர்த்தகம், கேளிக்கை, கல்வி, வங்கி பரிவர்த்தனை, பங்கு சந்தை பரிவர்த்தனை என பலவாறானவற்றில் ஆர்வம் உள்ளவர்களும் இந்த அதிவேக இணைய இணைப்பை உபயோகப் படுத்திகிறார்கள்.

இணைய இணைப்பு என்றாலே அதிவேக இணைய இணைப்புதான் என்னும் அளவிற்கு இன்று பிராட்பேண்டு சேவைகள் பெருகி விட்டன. அப்படி இருந்தும், பல்வேறு நிறுவனங்கள் மூலம் நமக்கு கிடைக்கும் பிராட்பேண்டு சேவைகளின் வேகத்தில்தான் எவ்வளவு வித்யாசங்கள். எந்த நிறுவனத்தின் சேவையில் வேகம் அதிகம், எந்த நிறுவனத்தின் சேவையில் டவுன்லோடு லிமிட் அதிகம் என்றெல்லாம் நாம் ஆராய்ந்து, இணைப்பை வாங்க வேண்டியிருக்கிறது. அப்படி வெகுவாய் ஆராய்ந்து வாங்கிய பின்னரும் சில சமயங்களில் நமக்கு வேகம் திருப்தி அளிப்பதில்லை.

அவ்வாறு திருப்தியடையாத வேகம் விரும்பிகளுக்கு ஓர் நற்செய்தி. அதாவது இந்திய அரசு, பிராட்பேண்டு இணைய இணைப்பிற்கான வரையறுப்பை மேம்படுத்தியுள்ளது. அதாவது, இனி பிராட்பாண்டு சேவை என்பது குறைந்த பட்சமாக வினாடிக்கு 512 கிலோபைட்டுகள் வேகம் உடையதாக இருக்க வேண்டும். இதுவரை இந்த வரையறுப்பு வினாடிக்கு 256 கிலோபைட்டுகள் வேகமே இருந்து வந்தது. இந்த புதிய வேக வரையறுப்பு இந்த ஆண்டில் இருந்து கடைப்பிடிக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்த ஆண்டில் பாதிக்கு மேல் முடிந்து விட்டது… சற்று முன்னரே அறிவித்திருக்கக் கூடாதா?…’ என்று கேட்பவர்களுக்கு மேலும் ஒரு செய்தி. வரும் 2015ஆம் வருடம் முதல் அதிவேக இணைய இணைப்பு என்பது வினாடிக்கு குறைந்தபட்சமாக 2 மெகாபைட்டுகள் வேகம் உடையதாக இருத்தல் வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ளது!

அப்புறம் என்ன? இனி உடனே உங்களுக்கு இணைய சேவை அளிப்பவரிடம் பேசி உங்கள் இணைப்பின் வேகத்தை அறிந்து கொள்ளுங்கள். அப்படி 512 கிலோபைட்டுகளுக்கும் குறைவாக இருந்தால் மேம்படுத்தச் சொல்லுங்களேன்!

பின்னூட்டமொன்றை இடுக