கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

‘கணினி’ பகுப்புக்கான தொகுப்பு

EXIF என்றால் என்ன?

Posted by அமிர்தராஜ் மேல் மார்ச் 15, 2012

டிஜிட்டல் காமிராக்களில் எடுத்த புகைப் படங்களைக் கணினியில் கையாளும் பொழுது ‘EXIF information’, ‘EXIF data’ என்றெல்லாம் பார்த்திருப்பீர்கள். இந்த எக்ஸிஃப் என்றால் என்ன, இது நமக்கு எவ்வாறு பயன்படும் என்று இப்பொழுது பார்ப்போம். எக்ஸிஃப் என்பது எக்ஸ்சேஞ்சபிள் இமேஜ் ஃபைல் ஃபார்மேட் என்பதன் சுருக்கமே ஆகும். (Exchangeable Image File Format) இந்த தொழில்நுட்பத்தின் சாராம்சம் என்னவென்றால் டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்படும் படம் மற்றும் ஒலி கோப்புகளில், உபயோகமுள்ள மற்ற தகவல்களையும் அதாவது அந்த கோப்புகளை தயாரிக்க பயன்படுத்திய இயந்திரங்களின் செட்டிங்குகள் மற்றும் ஏனைய விஷயங்களையும் அக்கோப்புடன் சேர்த்து சேமிப்பதுதான். இதனால் ஒரு படத்தின் எக்ஸிஃப் தகவலைப் பார்த்தே அது என்றைக்கு எடுக்கப்பட்ட படம், காமிரா மாடல் என்ன, காமிராவின் பல்வேறு செட்டிங்குகளின் அளவு போன்ற விஷயங்களை அறிந்து கொள்ளலாம். சரி. புரிந்து விட்டது. ஆனால் இதனால் நமக்கு என்ன பயன் அல்லது இந்த தகவலை நாம் எவ்வாறு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்?

படங்களின் மேலாண்மை:

உங்கள் கணினியில் பல நூறு படங்களை சேமித்து வைத்திருப்பீர்களானால் அவற்றை தரம் பிரித்து இலகுவாக கையாள பிகாஸா, டிஜிகேம், ஐஃபோட்டோ போன்ற ஃபோட்டோ மேனேஜ்மென்ட் மென்பொருட்களை உபயோகிக்கிறீர்கள் அல்லவா? இந்த மென்பொருட்கள் உங்கள் படங்களை, பிடிக்கப்பட்ட தேதிவாரியாக (மாதவாரியாக, வருடவாரியாக) அடுக்க மற்றும் தேட இந்த எக்ஸிஃப் தகவலையே உபயோகிக்கிறது. (அதனால் நீங்கள் படங்களை எடிட் செய்து சேமிக்கும் பொழுது, இந்த எக்ஸிஃப் தகவல் அழியாமல் கவனம் கொள்ள வேண்டும்). தற்போதைய உயர்தர காமிராக்களில் படம் பிடிக்கப்பட்ட இடம் கூட ஜிபிஎஸ் வாயிலாக அறியப்பட்டு எக்ஸிஃப் தகவலில் பதியப்படுகிறது.

டிஜிட்டல் ஃபோட்டோகிராஃபி பயில:

நீங்கள் எடுக்கும் படத்தின் தரம், படம் எடுக்கப்படும் சூழலுக்கு ஏற்றவாறு காமிரா செட்டிங்குகளை அமைப்பதில் தான் பெருவாரியாக அடங்கியுள்ளது. ஒரே நாளில் பல படங்களை எடுக்கும் பொழுது, எந்த ஷாட்டிற்கு என்ன செட்டிங்கு உபயோகித்தோம் என்று நினைவில் கொள்வது கடினம். நீங்கள் எடுத்த படங்களை கணினியில் பார்த்து ஆராயும் பொழுது, இந்த எக்ஸிஃ ப் தகவலில் உள்ள காமிரா செட்டிங்குகளை ஆராய்வதன் மூலம் எந்த மாதிரியான செட்டிங்குகள் நல்ல தரமான படங்களை உருவாக்குகின்றது என்று காண முடியும். நீங்கள் எடுத்த புகைப்படங்களை மட்டுமல்லாது மற்றவர்கள் எடுத்த தரமான படங்களையும் இவ்வாறு ஆராய்வதன் மூலம், எந்தெந்த காமிராக்களில் என்னென்ன செட்டிங்குகளை உபயோகப்படுத்துகிறார்கள் என்று அறிந்து கொண்டு, நீங்களும் தரமான படங்களை எடுக்க கற்றுக் கொள்ளலாம்! எல்லாம் ஓ.கே! ஆனால் ஒரு படத்தின் எக்ஸிஃப் தகவலை எவ்வாறு காண்பது? அடடே! இது ஒன்றும் பிரமாதம் இல்லை! நீங்கள் உபயோகிக்கும் ஃபோட்டோ மேனேஜ்மென்ட் மென்பொருள் எதுவாக இருந்தாலும் அதில் இந்த வசதி நிச்சயம் இருக்கும். மேலும் உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலுள்ள ஃபைல் எக்ஸ்புளோரரின் ஃபைல் புராப்பர்டீஸ் அப்லெட் (வலது கிளிக் >> புராப்பர்டீஸ்) வாயிலாகவும் எக்ஸிஃப் தகவலை காணலாம்.

உபுண்டு லீனக்ஸின் ஃபைல் புராப்பர்டீஸ் அப்லெட்

பிறகென்ன? நீங்களும் ஒரு கைதேர்ந்த டிஜிட்டல் ஃபோட்டொகிராஃபர் ஆக வேண்டியதுதானே!

.... இங்கே பதியப்பட்டது கணினி | Leave a Comment »

பிராட்பாண்டிற்கான புதிய வரையறுப்பு

Posted by அமிர்தராஜ் மேல் ஆகஸ்ட் 8, 2011

இன்றைய தேதியில் பிராட்பாண்டு இணைய இணைப்பு என்பது, நம்மில் பலரும் அன்றாடம் உபயோகப்படுத்தும் ஒரு சேவையாக உள்ளது. கணினித் துறையில் உள்ளவர் மட்டுமல்லாது வர்த்தகம், கேளிக்கை, கல்வி, வங்கி பரிவர்த்தனை, பங்கு சந்தை பரிவர்த்தனை என பலவாறானவற்றில் ஆர்வம் உள்ளவர்களும் இந்த அதிவேக இணைய இணைப்பை உபயோகப் படுத்திகிறார்கள்.

இணைய இணைப்பு என்றாலே அதிவேக இணைய இணைப்புதான் என்னும் அளவிற்கு இன்று பிராட்பேண்டு சேவைகள் பெருகி விட்டன. அப்படி இருந்தும், பல்வேறு நிறுவனங்கள் மூலம் நமக்கு கிடைக்கும் பிராட்பேண்டு சேவைகளின் வேகத்தில்தான் எவ்வளவு வித்யாசங்கள். எந்த நிறுவனத்தின் சேவையில் வேகம் அதிகம், எந்த நிறுவனத்தின் சேவையில் டவுன்லோடு லிமிட் அதிகம் என்றெல்லாம் நாம் ஆராய்ந்து, இணைப்பை வாங்க வேண்டியிருக்கிறது. அப்படி வெகுவாய் ஆராய்ந்து வாங்கிய பின்னரும் சில சமயங்களில் நமக்கு வேகம் திருப்தி அளிப்பதில்லை.

அவ்வாறு திருப்தியடையாத வேகம் விரும்பிகளுக்கு ஓர் நற்செய்தி. அதாவது இந்திய அரசு, பிராட்பேண்டு இணைய இணைப்பிற்கான வரையறுப்பை மேம்படுத்தியுள்ளது. அதாவது, இனி பிராட்பாண்டு சேவை என்பது குறைந்த பட்சமாக வினாடிக்கு 512 கிலோபைட்டுகள் வேகம் உடையதாக இருக்க வேண்டும். இதுவரை இந்த வரையறுப்பு வினாடிக்கு 256 கிலோபைட்டுகள் வேகமே இருந்து வந்தது. இந்த புதிய வேக வரையறுப்பு இந்த ஆண்டில் இருந்து கடைப்பிடிக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்த ஆண்டில் பாதிக்கு மேல் முடிந்து விட்டது… சற்று முன்னரே அறிவித்திருக்கக் கூடாதா?…’ என்று கேட்பவர்களுக்கு மேலும் ஒரு செய்தி. வரும் 2015ஆம் வருடம் முதல் அதிவேக இணைய இணைப்பு என்பது வினாடிக்கு குறைந்தபட்சமாக 2 மெகாபைட்டுகள் வேகம் உடையதாக இருத்தல் வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ளது!

அப்புறம் என்ன? இனி உடனே உங்களுக்கு இணைய சேவை அளிப்பவரிடம் பேசி உங்கள் இணைப்பின் வேகத்தை அறிந்து கொள்ளுங்கள். அப்படி 512 கிலோபைட்டுகளுக்கும் குறைவாக இருந்தால் மேம்படுத்தச் சொல்லுங்களேன்!

.... இங்கே பதியப்பட்டது இணையம், கணினி, செய்தி | Leave a Comment »

 
Follow

Get every new post delivered to your Inbox.